Monday 31 December 2012

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)

By: Unknown On: 11:19
  • Let's Get Social
  • * தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்
     குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை  தோன்றுவதே சமநிலையாகும்.
     இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி



    அமைதியாக  வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

    * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி
     அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்
     வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக
     மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த
     யோகியாகிறான்.

    * எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு
     கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்
     படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,
     சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்
     நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

    * ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை
     துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,
     விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது
     ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை
     அடக்க வேண்டும்.

    * வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.
     அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால
     நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்
     கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

    * சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,
     விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல்
     இருப்பான்

    கடவுளே அறிவின் வடிவம்!

    By: Unknown On: 11:16
  • Let's Get Social
  • * உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு
     அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு
     மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே,


    வலிமைகளில் எல்லாம்
     உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும்
     செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை
     பெறுவான்.

    * அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து
     நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால்
     உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே
     உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும்
     அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள்
     யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

    * பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும்
     தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த
     இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி
     வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன்
     வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன்
     உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து
     விடுவார்கள்.

    * மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின்
     வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே
     வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை
     சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

    அப்பாவிகளைத் தண்டிக்காதே-(புத்தரின் பொன்மொழிகள் )

    By: Unknown On: 11:13
  • Let's Get Social
  • அப்பாவிகளைத் தண்டிக்காதே

    * தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின்
     குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான்
     பெருஞ்செல்வம்.

    * தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான்.
     மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே.

    தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன்
     துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும்
     அதிகமாய்த் துன்புறுகிறான்.

    * காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும்
     கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.
     அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை
     அடைகிறார்கள்.

    * குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன்,
     கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து,
     சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு,
     உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ,
     இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை
     உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன்
     துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

    * கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக்
     காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத்
     தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து
     மீட்டுக்கொள்.

    * வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக்
     கழுவுவதே எனக்குத் தேவை.

    * நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை,
     தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள்,
     சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால்,
     துன்பங்களை விரட்டி விடலாம்.

    கருணை உள்ளம்; கடவுள் இல்லம்!

    By: Unknown On: 11:10
  • Let's Get Social
  • ஒருவர் பணமின்றி, சாப்பாட்டுக்கே திண்டாடுகிறார் என்றால், அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு தான்.



    இறைவனால் தரப்பட்ட இந்த தண்டனையை ஏற்று, இந்தப் பிறவியிலாவது மற்றவர்களுக்கு நன்மையைச் செய்தால், அவருக்கு இறைவனின் அருட்கடாட்சம் நிச்சயம் கிடைக்கும். இந்த உண்மையை உணர்த்துவதே அட்சய திரிதியை கொண்டாட்டத்தின் நோக்கம்.
    பல நூறு ஆண்டுகளுக்கு முன், மலை நாடு எனப்பட்ட கேரளம், வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. அவரவர் வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களே குடும்பத் தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு அந்தணர் தம்பதியின் தோட்டத்தில் எதுவுமே விளையவில்லை. இதற்கு காரணம், அவர்களது கர்மவினை. அவர்கள் சாப்பாட்டுக்கே திண்டாடினர்.


    இருந்தாலும், அந்த ஏழைத் தம்பதியர் ஆச்சார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தனர். அந்தணர் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்கப் போவார்; எல்லாரும் அநேகமாக பிச்சை போடுவர். ஆனாலும், சில நாட்கள் முன்வினை பாவம் விரட்டும். அன்று எல்லாருமே கையை விரித்து விடுவர். இவரும், இவரது மனைவியும், பட்டினி கிடப்பர்.

    இந்த வீட்டுக்கு, ஒருநாள் பிச்சை கேட்டுச் சென்றார் ஆதிசங்கரர். இவர், காலடி என்ற ஊரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இறையருளால் துறவறம் ஏற்றவர். வாசலில் நின்று ‘அம்மா, பிச்சையிடுங்கள்…’ என்று கேட்டார். அப்போது, அந்தணர் வீட்டில் இல்லை. அந்த அம்மையார் வெளியே எட்டிப் பார்த்தார்.

    பால பருவத்தில் தேஜசான முகத்துடன் நின்ற துறவியைப் பார்த்ததுமே, ஏதாவது கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டது. முதல்நாள் ஏகாதசி என்பதால், வீட்டில் விரதம். துவாதசியன்று அந்தணருக்குக் கொடுப்பதற்காக, அவர் என்றோ வாங்கி வந்த, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. அதை எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தாள்.

    எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், எது நம்மிடம் இருக்கிறதோ அதை கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதுதான் நிஜமான தர்மம். அந்த தர்மத்தை, அந்தப் பெண் அனுஷ்டித்தாள். நெகிழ்ந்து போனார் சங்கரர் .
    ‘அம்மா… மகாலட்சுமி! இவர்களைப் போன்று, இருப்பதைக் கொடுக்கும் மனமுள்ளவர்களிடம் அல்லவா நீ இருக்க வேண்டும்! இந்த வீட்டுக்குள் நீ வர மறுப்பது ஏன்?’ என்றார். அப்போது அசரீரி ஒலித்தது.
    ‘அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கின்றனர். இன்னும் பாக்கி யிருக்கிறது. அது, முடியட்டும், பார்க்கலாம்…’ என்றது.


    உடனே சங்கரர், ‘அம்மா… இரக்கமுள்ளவள் நீ. இன்று இப்படிப்பட்ட நல்ல மனதுக்கு சொந்தக்காரர்களான இவர்கள், முற்பிறவியில் என்ன செய்திருந்தால் தான் என்ன… நீ நினைத்தால் அதைக் களைய முடியாதா?’ என்று பாடினார். கனகதாரா ஸ்தவம் எனப்படும் இந்த ஸ்லோகங்களின் முடிவில், லட்சுமியே இரக்கப்பட்டு, அந்தக் குடிசை வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாக விழச் செய்தாள். அந்த ஏழைகள் தங்கள் வறுமை நீங்கி, பிறருக்கும் வாரிக் கொடுத்தனர். நாம், என்ன பாவத்தை அனுபவித்தாலும் சரி… பிறர் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால், நம் கருணை உள்ளம் கடவுள் வாழும் இல்லமாக இருக்கும்.

    ***
    அட்சய திருதியை அன்று செய்யும் தானத்தின் பலன்கள்…
    * நலிந்தவர்களுக்கு உதவி செய்தால், மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை     அமையும்.
    * ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
    * பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
    * நீர், மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி வளம் கிடைக்கும்.
    * தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
    * தயிர்சாதம் தானம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும்.
    * புண்ணிய நதிகளில் நீராடி, இறைவனை தொழ, வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.

    Saturday 15 December 2012

    புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு.

    By: Unknown On: 01:03
  • Let's Get Social
  • யாழ்ப்பாணக்குடாநாட்டின் வடமேற்குப்பகுதியில் சப்ததீவுக்ளுக்கு நடுவிலே அமைந்து சிறப்புற்று விழங்குவது புங்குடுதீவு. இங்கே சிறியதும் பெரியதுமாய் அறுபதுக்கு மேற்ப்பட்ட சைவ ஆலயங்கள் அமைந்திருந்து சிறப்புச்சேர்க்கின்றன.

    இவற்றிலே பன்னிரண்டு அம்மன் ஆலயங்களாக இருந்த போதிலும் அவற்றில் இரண்டு முருகன் ஆலயங்களாக காலப்போக்கிலே மாற்றமடைந்துவிட்டன. கண்ணகை அம்பாள், குறிகட்டுவான் மனோண்மணி அம்பாள், முத்துமாரி அம்பாள், காளிகா பரமேஸ்வரி அம்பாள், மாவுதிடல் மலையடி நாச்சியார், கள்ளிக்காடு துர்க்கை அம்பாள், பட்டயக்கார அம்பாள், கண்ணகிபுரம் பத்திரகாளி அம்பாள், பிட்டிவயல் நாச்சிமார், இத்தியடி நாச்சிமார் (நாகபூசணி அம்பாள்) என்பனவே ஏனைய பத்து சக்தி பீடங்களுமாம்.





    இவற்றுள்ளே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே சிறக்கப்பெற்று வரலாற்றுச்சிறப்புமிக்கதாய் புங்குடுதீவின் தெற்கு கடற்கரையோரத்தில் ஏறத்தாள ஆயிரம் பரப்பு நிலத்திலே
    சித்திரமணி மகுடம் பத்மமலர் வதனமும்
    செம்பவள வாய் முறுவலும்
    சிந்தூரப் பொட்டழகும் செய்ய விருகாதினில்
    திகழும் பொற் கொம்பினழகும்
    முத்து மூக்குத்தியும் நெஞ்சிற் பதக்கமும்
    முருகுதவழ் மலர் மாலையும்
    முத்தாரம் கையினிற் கடகமும் கணையாழி
    மொய்த்திட்ட விரலினழகும்
    கொத்துமணிமேகலையும் வஞ்சி
    நுண்ணிடை – யழகும்
    கோகனகப் பாதச் சிலம்பும்
    கோடானகோடி யருணோதயப் பிரகாசமும்
    கொண்ட நின் காட்சி யடியேன்
    எத்தனை விதங்கள்தான் ஒண்ணிருங் காணாது
    ஏங்குதே நெஞ்சமம்மா!
    எழிலாரும் புங்கைநகர் தென்கரையில்
    தங்கி வாழ் இராஜராஜேஸ்வரி அம்மையே!
    என்று எல்லோரும் போற்றி வழிபட்டு பேறடையும் வண்ணம் அமைந்திருப்பது கண்ணகை அம்மன் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.

    புங்குடுதீவிலே வாழ்ந்த நிலச்சுவாந்தர்களில் ஒருவராகிய கதிரவேலு ஆறுமுகம் உடையார் என்பார் ஒரு பொழுது ஒரு பேழையினை புங்குடுதீவின் தென்கிழக்கு கடற்கரையிலே கோரியா என்னும் இடத்தில் கண்டெடுத்தார். அப்பேழையினை எடுத்து வந்து தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்திலே இருந்த பழமையான பூவரசம் மரத்தின் கீழே வைத்து திறந்து பார்த்தபோது அங்கே ஒளிமயமாகிய ஒரு அம்பாள் சிலை காணப்பட்டது. உடனே ஆறுமுகம் உடையார் ஊர்மக்களின் உதவியோடு அங்கே சிறியதொரு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். கண்ணகி அம்மனை பேழையுடன் வைத்த நானூறு வருடங்கள் பழமையான பூவரசு மரம் தலவிருட்சமாகியது. இச்சம்பவம் நடைபெற்றது 15ம் நூற்றாண்டாயிருத்தல் வேண்டும்
    காலத்துக்கு காலம் இவ்வாலயம் புனரமைக்கப்பெற்று வந்து நாளடைவிலே சுண்ணக்கல்லினாலே நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பெற்றது. 1880ம் ஆண்டிலிருந்து நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்த்தொடங்கியது.

    1931ம் ஆண்டு கோவில் புனரமைப்புச்செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன்போது கருவறையில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தின் வடக்குப்புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாக சமுத்திரத்தை நோக்கியதாக ஸ்ரீ கண்ணகை அம்பாளும் பிரதிட்டை செய்யப்பட்டனர். இவ்வாண்டு கோயில் திருவிழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
    1944 இல் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957இல் ஆலயத்தின் சுண்ணாம்புக் கட்டடம் அனைத்தும் சீமெந்துக் கட்டங்களாக மாற்றம்பெற்றன. இதன்பின் 1964இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. 1957 இல் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுர வேலைகள் மற்றும் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சித்திரத்தேர் வேலைகளும் 1979இல் நிறைவு செய்யப்பட்டதோடு நைமித்திய பூசைகள் சித்திரா பௌர்ணமியை ஆரம்பமாய் கொண்டு 15 நாட்களாக மாற்றப்பட்டது. 1954ம் ஆண்டில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவின் சிறப்புப்பற்றி இன்றும் பேசப்படுகின்றது.

    பொன்பெருகு சைவநெறிப்
    புண்ணியம்பொலியமறை
    பூத்தவாகமங்கள் பொலியப்
    புராணவிதிகாசங்கள் தருநீதி நிறை பொலியப்
    பொழிந்த திருமுறைகள் பொலிய
    அன்புநாண் ஒப்புரவு
    கண்ணோட்டம் வாய்மையெனும்
    ஐந்துமுயர் சால்பு பொங்கும்
    ஆனந்த சமுதாய ஞானவொளி பொலியமெய்
    யடியாரும் தமிழும் பொலிய
    முன்புதொடுவினை நீக்கி முத்தியுறு பணியாக்கி
    முந்துமன் னுயிர்கள் பொலிய
    முத்துநவ ரத்தின மிசைத்த மணித் தேரேறி
    முதுவீதி வருமன்னையே
    இன்பமிகு நின்பாத பங்கயமலர்ந்த சுக
    மெங்களுக் கினிதருளுவாய்
    எழில்வாரிப் புங்குநகர் வந்த கண்ணகித்தாயே!
    இராஜராஜேஸ்வரியே!

    Sunday 9 December 2012

    கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?

    By: Unknown On: 11:47
  • Let's Get Social

  • உதைத்தால் கடவுளும் கூட...
    அடி உதவுவது போல, அண்ணன் தம்பி உதவமாட்டார்கள். அடியாத மாடு படியாது. ஆணை அடித்து வளர்க்கணும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இப்படி எத்தனை, எத்தனையோ பழமொழிகள் தமிழில். தமிழனின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் வகையில் இவை அமைந்துள்ளன எனக்கூடக் கூறலாம்.

    ஓடப்பராயிருக்கும், ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார், உணரப்பா நீ என்றே கூறிவிட்டார் புரட்சிக் கவிஞர்,.

    அடித்துத் திருத்த முடியாது, அன்பால் திருத்தலாம் என்பர் மென்மனம் கொண்டோர். எது எப்படி இருப்பினும் அடித்து வேலை வாங்கினால்தான் சரிப்படும் என்பவர்களைத் திருத்தவே முடியாது. அவர்களின் தத்துவம் சரி என்கிற நினைப்பு கூட வந்துவிடுகிறது நமக்கு,. கடவுள் ஒன்றுக்கு ஏற்பட்ட கதையைக் கேட்கும்போது!

    நெல்லை, பாளையங்கோட்டையில் இருக்கும் எத்தனையோ கோயில்களில் ராஜகோபாலன் கோயிலும் ஒன்று. வைணவக் கோயில் என்பதை நாம் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை ஒருபக்கம் ருக்மணி பெண்டாட்டி. மறு பக்கம் சத்யபாமா சகதர்மிணி. இரண்டு பெண்டாட்டிக்கார கடவுள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் குந்திக் கொண்டுள்ளது. இந்த லட்சணத்தில் இது உற்சவராம்-. தெருத் தெருவாக இதைத் துக்கிக் கொண்டு அலைவர் அய்யங்கார்கள்.

    இந்தப் பொம்மையின் மூக்கு உடைந்த காயத் தழும்பு காணப்படுகிறது. செய்தவன் சரியாகத்தான் செய்திருப்பான் - சாமிமலையிலோ நாச்சியார் கோயிலிலோதானே கடவுள்களின் உற்பத்தி ஸ்தானம்! அவர்கள் மூக்கும் முழியுமாகத்தான் செய்திருப்பார்கள். பின் எப்படி காயம், தழும்பு-?
    ராஜகோபாலன் கோயிலின் அர்ச்சகர் விஷ்ணுப்பிரியன் என்பவருக்கு எல்லாமே பெண் குழந்தைகளாம். புத்தேள் நரகம் போகாமல் தப்பிப்பதற்காக ஆண் குழந்தை வேண்டும். என்று ஆசைப்பட்டானாம். ராஜகோபாலனிடம் வேண்டிக் கொண்டாராம். அந்த முறை பிறந்ததும் பெண்ணாகவே இருந்து விட்டதாம். கையில் இருந்த அர்ச்சனைத் தட்டாலேயே கடவுள் ராஜகோபாலனைக் சாத்து, சாத்து என்று சாற்றி விட்டானாம். ராஜகோபலன் பொம்மையின் மூக்கு உடைபட்டகாயம் தானாம் அது. வேண்டுதல் பலிக்காமல் போனதற்காகக் கடவுளைப் போட்டு அடித்தான் பக்தன் என்றும் அடிவாங்கிய பிறகு, பிறந்த பெண்ணை ஆணாக மாற்றி விட்டது கடவுள் என்றும் புளுகி வைத்துள்ளார்கள்.

    அப்ப, அடி உதவுவது போல எதுவும் உதவாது ஆண்டவனிடம் கூட என்பது கதைமூலம் தெரிகிறது. பக்த கோடிகள் இதனைத் திருவிளையாடல் என்கிறார்கள் என்ன பேர் வைத்தாலும், அடிதானே, உதை தானே! இப்படியெல்லாம் எழுதிக் கடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார்? பக்தர்களா? கடவுள் இல்லை என்பவர்களா?

    கல்லினுள் தேரைக்கும் ...

    கல்லினுள் தேரைக்கும் படியளக்கிறது பரமசிவம் என்பார்கள் பக்தர்கள். எல்லார்க்கும் படியளக்-கும் பரமன் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வழிபடப்படுவதில்லை அதனால், அந்த நாடுகளில் உள்ள தரித்திர நாராயணர்களைப் பற்றி எழுதப்போவது இல்லை, இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறோமே, இருக்கின்ற 200 நாடுகளைப் பற்றி பரமசிவன் கவலை கொள்ளக் காணோமே என்று யாரும் யோசிப்பதே கிடையாது. புண்ணிய பாரத பூமியைவிட தரித்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ள வளரும் நாடுகள் எனும் பட்டம் தாங்கிய நாடுகளின் மோசமான நிலையை யாராவது சிவனிடம் சொல்லி வைக்கலாமே! இந்தியாவில் 25 விழுக்காடுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்கள் உள்ளனர். 10 விழுக்காட்டுக்குமேல் வேலை கிட்டாதவர்கள் உள்ளனர். இவர்களின் வயிற்றுப் பாடுக்கு ஏதாவது செய்திட வேண்டாமா? இன்னமும் பாராமுகம் ஏன் பரமனுக்கு? தேரையைவிடக்

    கேவலமா, அரிதான மானிடப் பிறவிகள்?

    இதுகிடக்க, கல்லினுள் தேரைக்கும் படியளந்த கதையைப் பார்ப்போமா? தேரைத்தவளை சைகிலேரனா ஆஸ்கட்டடா எனும் இனவகையைச் சேர்ந்தது. இதன் உடலில் உள்ள செல்களின் ஆற்றல் மய்யமான மைடோக் கான்ட்ரியா பகுதி, தனக்குத் தேவையான சக்தியைத் தானாகவே தயாரித்துக் கொள்ளும் தனித் தன்மை வாய்ந்தது. தாவரங்கள் தங்கள் சக்தியைத் தயாரித்துக் கொள்வதைப்போல! தாவரங்கள் எதையும் உண்ணாலேயே வளர்கின்றனவே, அதைப்போல! தவளைகள்தூங்கினாலும் இது செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றலைத் தவளை பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த இனத் தவளைகளுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பான வசதி இது!

    தன் உடலுக்குத் தேவையான வெப்பம், தேவைக்கேற்ப வெப்பத்தைக் கூட்டவும் குறைக்கவுமான வசதி போன்றவையும் தேரைக்கு உண்டு.
    ஆகவே, தேரை சாப்பிடாமலே வாழக்கூடிய, வளரக்கூடிய, வசதிகள் அதன் உடலில் இயற்கையாகவே உள்ளன. இது தெரியாமல் பக்தர்கள் பரமசிவன், படி, அரிசி, சோறு, குழம்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
    மாம்பழத்து வண்டு, கல்லினுள் தேரை போன்றே பல இயற்கைச் செயல்களுக்குக் காரணம் இவை எனும் அறிவில்லாத மக்கள் ஆண்டவனைக் காட்டிக் கொண்டிருக்கும் அறியாமையை அறிவியல் தோலுரித்துக் காட்டியுள்ளது.

    குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் தேரை பற்றிய ஆய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

    சானிடரி நாப்கினுக்குப் பதிலாக...

    கணவனை உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒரு புராணக்கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்தார் தன் தந்தை என்பதற்காக யாகத் தீயில் விழுந்து செத்த தன்மனைவியின் வெந்த உடலைத் தூக்கிக் கொண்டு சிவன் அலைந்தானாம். அவளின் பெண்குறிப் பகுதி பிய்த்துக் கொண்டு தனியே விழுந்ததாம், அசாமில் காமாக்யா எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலின் தாத்பர்யம் அதுதானாம்.

    கோயிலின் வழிபடு கடவுள், வெறும் பெண்குறி மட்டுமே! கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் வகையில் அதன் கீழே ஊற்று நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இதை வணங்கிப் போகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவும் உண்டு. கடந்த ஜுன் மாதம் 25 ஆம்தேதி நடந்தது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கூட்டம். சிவப்புத் துணி, முகம் முழுவதும் சிவப்புக் குங்குமம், ஓடும் நீரெல்லாம் பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தால் சிவப்பாகிப் போன நிலை.

    அம்பாளை வாழ்த்திப் போடப்பட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது. என்ன கோஷம் தெரியுமா? பிரிதிபி ரஜஷால ஹோய் என்பதே! பூமித்தாய்க்கு மாதவிடாய் வருகிறது டோய் என்பது அதன் பொருள்.

    அது என்ன? மாதத்தில் மூன்று நாள்கள் மகளிர்க்கு குருதிக் கசிவு ஏற்படுவது இயற்கை. மரித்துப் போன கருமுட்டைகள் வெளியேற்றப்படும் இயற்கை வழி. காமாக்யா கடவுளச்சி அல்லவா? மாதம் ஒரு முறை என்பதற்குப் பதில் ஆண்டுக் கொரு முறை குருதி ஓட்டம் நடக்குதாம்! ஆகவே கோயிலின் கதவுகளைச் சாத்திவைத்து யாரும் பார்க்காதவாறு செய்கிறார்கள் மூன்று நாள்களுக்கு!

    நான்காம் நாள் கதவைத் திறந்து காட்டுகிறார்கள். எல்லாம் கழுவிச் சுத்தமாக்கப்பட்ட கருவறைக் காட்சியைக் காணப் பக்தர்கள் கூட்டமோ, கூட்டம்! இந்த ஆண்டு 7 லட்சம் பேர்களாம்! அசாமின் கும்பமேளா கும்பலாம்! இப்படிப்பட்ட முதல் காட்சியைக் கண்ட பக்தர்கள் நினைத்ததெல்லாம் நடக்குமாம்.

    இதற்கெனவே ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் அகோர் சாமியார்கள், எப்போதும் அம்மணமாகவே திரிந்து கொண்டிருக்கும் நாகா சாமியார்கள், கூட்டம் கூட்டமாகப் பாதையெங்கும் டென்ட் களில் தங்கிக் கொண்டு கூடியிருக்கின்றனர். சுடுகாட்டில் நள்ளிரவில் சக்தி வழிபாடு நடத்தும் சாமியார்களின் கூட்டமும் வந்ததாம். (சக்தி வழிபாடு பற்றிக் தெரிந்து கொள்ள "ஞான சூரியன்" படிக்கவும்)

    வந்த பக்தர்களுக்குப் பிரசாதம் என்ன தெரியுமா? ரத்தக் கறைபடிந்த சிவப்புத் துணித் துண்டு நூல்திரி! குருதிப் பெருக்கு ஏற்பட்ட யோனிப் பகுதியில் வைக்கப்பட்டு மூன்று நாள்கள் இருந்த சிவப்புத் துணியின் கிழிக்கப்பட்ட பகுதிகள்! குமட்டிக் கொண்டு வருகிறதா? தெய்வீகப் பிரசாதம். குறைகூறக் கூடாது.

    இந்த மதமும், பண்டிகைகளும், சடங்காச்சாரங்களும் அடங்கிய இந்துத்வா தான் இந்தியாவுக்குத் தேவை என்கிறார்கள்! சானிடரி நாப்கின் வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற விளம்பரம் தொலைக் காட்சியில் வந்தால், ஆச்சாரம், ஒழுக்கம் கெட்டுப் போச்சு எனும் மடிசார் மாமிகள் இந்த விழாபற்றி என்ன கூறுவார்கள்?

    நிஷ்காம்ய கர்மம்! – வாலி

    By: Unknown On: 11:33
  • Let's Get Social

  • ‘கடவுள் இல்லை;
     கடவுள் இல்லை;
     கடவுள் இல்லவே இல்லை!’

    -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

    நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

    பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

    கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

    ‘காலையில் தினமும்

    கண் விழித்தால் நான்

    கைதொழும் தெய்வம் அம்மா!’

    - ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

    “வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

    “ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.

    பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

    அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து – தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

    இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

    இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

    நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

    திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது – ‘நிஷ்காம்ய கர்மம்’; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

    திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

    ‘ஆண்டவன் எந்த மதம்?

    இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

    - என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

    பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

    கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

    தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

    கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

    மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

    ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

    ‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு -

    அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

    அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

    அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்’; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

    ‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

    வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

    இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

    B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

    சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

    படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

    கதைகளில்

    காணுகின்ற

    சமயத்துக் கேற்றபடி;

    சமயத்துக் கேற்றபடி அல்ல!

    நன்றி: விகடன்

    கடவுள் எங்கே இருக்கிறார்?

    By: Unknown On: 11:22
  • Let's Get Social
  • நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி
     கேள்வி கேட்கலானார்.





     “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

    “நிச்சயமாக ஐயா..”

    “கடவுள் நல்லவரா?”

    “ஆம் ஐயா.”

    “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

    “ஆம்.”

    “எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

    (மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

    “உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

    “ஆம் ஐயா..”

    “சாத்தா‎ன் நல்லவரா?”

    “‏இல்லை.”

    “எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

    “கடவுளிடமிருந்துதா‎ன்.”

    “சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

    “ஆம்.”

    “அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

    (மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

    “இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

    ……

    “அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

    …….

    “ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

    “ஆம் ஐயா..”

    “நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

    “ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

    “ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

    (‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

    “ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

    “நிச்சயமாக உள்ளது.”

    “அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

    “நிச்சயமாக.”

    “இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

    (வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

    “ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

    (குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

    “சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

    “ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

    “நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

    “சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

    “ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

    “பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

    “ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

    அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
     �். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

    இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

    “சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

    “”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

    “உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

    (பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

    “அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

    (மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

    “இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

    (வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

    “யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

    “அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

    “மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

    (மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

    “நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

    “அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

    இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

    இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

    இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

    வேறு யாருமல்ல.

    ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

    Thursday 15 November 2012

    48 நாள் ஐய்யப்ப விரதமும் வழிபாடு பலன்களும்!

    By: Unknown On: 09:50
  • Let's Get Social
  • நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. நாளை அய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க மாலை அணிய உள்ளனர். இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் கேட்டபடி இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை தேடிச்சென்று அருள் பெற்று திரும்பும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.


    சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்குவதால் பக்தர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிடும். சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். சபரிமலை அய்யப்பன் பற்றியும், 48 நாள் விரதம் மற்றும் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்…..

    சபரிமலை யாத்திரை – விரத முறைகள் சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள்.

    யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கும் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.

    இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத் தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும்.

    பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.

    1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது சாலச் சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

    2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருஉருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

    மாலை அணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

    4. காலை, மாலை இரு வேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருஉருவ படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

    5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதைïட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளை தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடித்து தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

    7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது, “சாமி சரணம்” என்ற தொடங்கிய பின் விடைபெறும்போது “சாமி சரணம்” எனச் சொல்ல வேண்டும்.

    8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

    9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை ”மாளிகைபுறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளைக் “கொச்சி” என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

    10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் “நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம் என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

    11. மாலை அணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களுக்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.

    12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

    13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு “கன்னி பூஜை” நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

    14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் “கன்னி ஐயப்பன்” என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை “பழமக்காரர்கள்” என்றும் அழைக்கப்படுவார்கள்.

    15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்து விட்டு “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

    16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட தகதியிலிருந்து ஐயப்பன் சன்னதிதானம் செல்லும் வரை அவர்களால் இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் கூறிக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப் பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்போது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம்.

    நீண்ட  வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் கூறுவதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

    வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருஉருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி????

    By: Unknown On: 09:46
  • Let's Get Social
  • எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார்
    என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.


    இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

    வேண்டுவனயாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

    கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

    (இந்த வருடம் 13.11.2012 முதல் 18.11.2012 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (18.11.2012) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள்.

    அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

    அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    Sunday 11 November 2012

    வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்றும் தீபாவளி திருநாள்!

    By: Unknown On: 22:04
  • Let's Get Social
  • இந்துக்களின் பண்டிகைத் திருநாளாக தீபாவளியை கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா நரகாசுரன் எனும் அரக்கன் உயிர்களுக்கு கேடு விளைவித்ததால் அவனை அழித்து உயிர்களை துன்பத்திலிருந்து மீள அருள் செய்தார்.


    தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில், மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் எமக்கு எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்றே அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    புராணங்கள் கூறுவதும் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் படியும் பார்த்தால் கொடுமையான அரக்கன் ஒருவனால் அல்லல் உற்றவர்களுக்கு கிருஷ்ண பகவான் திருவருளால் விடுதலை கிடைத்த மாபெரும் தினம் இத்தீபாவளித்திருநாள். அரக்கன் அழிந்தான். கொடுமை இருள் அறியாமை மறைந்தது. ஒளியாமை பிறந்தது. ஆம் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மானிட வாழ்வில் அரக்க குணத்தை விட்டொழித்து நற்குணங்களை தம்மனதில் நிலை நிறுத்தி அறிவு பரப்பிட குறைவில்லாது நிறைவுடன் வாழத்தொடங்கினர். இல்லாதவர்க்கு இருப்பதைக்கொடுத்து சிறப்புடன் வாழ அறிவுக் கண்களை திறந்து ஒளி பெறச்செய்தனர். இப்படி அன்று இந்நாளில் கொண்டாடியதை இன்றும் அது வழமையாய் தீபாவளிப் பண்டிகை அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதி அன்று கொண்டாப்படுகிறது.

    நரக சதுர்த்தசி அன்று நரகாசுரன் அழிந்ததால் மக்கள் துன்ப இருள் நிங்கியது என ஒளி தீபம் ஏற்றி இல்லங்கள் எங்கும் ஒளி ஏற்றினர். வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். அக அழுக்கு, புற அழுக்கு எல்லாம் போக்கி எண்ணெய் தேய்த்து, அதிகாலையில் நீராடி புத்தாடை அணிவர். பின் கவலை மறந்து ஆடிப்பாடி உறவினர்கள் அனைவருடனும் திண்பண்டங்கள், பழங்கள், என விருந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். துன்பம் போக்கிய அந்த கிருஷ்ணபகவானை வாழ்த்தி துதி செய்து மகாலஷ்மியை நிணைந்து அழகுகோலம் இட்டு, வீட்டை அழகு படுத்தி விளக்கேற்றி லஷ்மி பூஜை செய்து வழிபாடாற்றினர். "தம ஸோ மா ஜ் யோதிர் கமய" அதாவது இருளில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல் என்ற வேண்டுதல் உணர்வோடு விளக்கேற்றுவது; கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி பூமாலைகள் தொங்க விட்டு வீட்டை நேர்த்தியாக அழகுபடுத்துவது. இப்படி நமது காலாச்சாரத்தை வளர்த்து இறை உணர்வினை ஊட்டி
    ஒற்றுமை மேலோங்கிடச் செய்தனர்.

    நமது புராணங்களில் இத் தீபாவளித் திருநாளுக்கு பலவிதமான கதைகள் கூறப்படுகிறது. விஸ்ணு புராணமும் ஸ்ரீமத்பாகவதமும் ஒரேமாதிரியாக குறிப்பிட்டுச் சொல்கின்றன. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது "ப்ருகு" முனிவரின் மகளாகிய ஸ்ரீலட்சுமி பதினான்கு இரத்தினங்களில் ஒன்றாக கொண்டாள். அவள் வடிவம் 'தூயஸ்படிகமணி' போன்ற பேரெழில் கொண்டு கையில் தாமரை மலருடனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருந்தபடி ஆழ்கடலில் இருந்து வெளிப்பட்டாள். அவளை அபிஷேகித்து ஆராதித்து தேவர்களனைவரும் மகாவிஸ்னுவுக்கு அர்ப்பணித்தனர். அவரும் அவளுக்கு தனது இதயத்தில் இடமளித்து மார்பில் அமர்த்திக் கொண்டார்.

    செளகந்தர்ய புராணத்தில் கூறப்பட்ட விதம் வேறு. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து பெறப்பட்ட  இரத்தினங்களும் இதர பொருட்களும் சரிவர பிரிக்கப் படாததால் அசுரர்கள் அரசன் 'பலிக்கு' மனக்குறை. அதனால் இரத்தினங்களில் மகாலட்சுமியை அங்கிருந்து அபகரித்து ஒரு இருட்சிறையில் அடைத்து வைத்து விட்டான். அதோடு மட்டுமல்லாது தேவர்களை துன்புறுத்தியும் வந்தான். தேவர்கள் சிவன், பிரம்மா இருவரிடமும் சென்று இதற்கு என்னவழி எனக்கேட்க அவர்கள் விஷ்ணுவிடம் முறையிடுமாறு கூறியதைக் கேட்டு, விஷ்ணுவிடம் குறை களைந்து லட்சுமியை மீட்குமாறும் அவளை ஏற்றுக்கொள்ளவும் வேண்டி நின்றனர்.

    பலிமன்னன் தான தர்மர்மங்கள் செய்வதோடு மட்டுமல்லாது மிருத்யுஞ்ச வரமும் பெற்றிருந்தான். அதனைக் கருத்தில் கொண்ட  மகாவிஷ்ணு வாமன உருவம் தாங்கிப் (குள்ள உருவம்) பலி மன்னனிடம் சென்றார். அங்கு அவன் பித்ரு பூஜை செய்யும் சமயத்தில் மூன்றடி மண் நிலத்தை தானமாகப் பெற்று அதை தந்திரமாகக் கையாண்டார். ஓரடி பூலோகத்தையும், ஈரடி பதினான்குலோகங்களையும், மூன்றாவது அடி அவன் தலையிலும் கால் வைத்து அவனை அழித்து இலட்சுமியை மீட்டார். பலி மன்னனும் லட்சுமி என்றும் பூமியில் இருக்குமாறு விஷ்ணுவிடம் வேண்டினான். அதற்கு விஷ்ணுவும் முற்றிலும் இங்கு இருந்திட முடியாது என்று கூறிவிட்டு யார் வீட்டில் ஜப்பசி மாதக் கிருஷ்ணபட்சத் திரயோதசி முதல் அமாவாசை வரை தீபங்கள் ஏற்றி அலங்கரித்து லட்சுமி பூஜை நடத்தப்படுகிறதோ அவர் வீட்டில் அந்த வருடம் முழுவதும் ஸ்ரீலட்சுமி வந்து தங்கி வாசம் செய்வாள் என்றார். அதன்படித் தான் தீபாவளியன்று நாம் தீபங்களை ஏற்றி எங்கும் மங்கலம் பொங்க மகிழ்வுடன் காத்தல் கடவுள் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்குகிறோம்.

    தீபாவளியின் பொருள் தீபம்+ ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஆகவே தீபாவளித் தினத்தில் நமது கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது ஆகும். இத்தீபத் திருநாளில் வரிசையாக நேர்த்தியாக கோலங்கள் அழகுடன் மாவினால் வரைந்து நிறமூட்டி தீபங்களை ஏற்றி அதன்மேல் அழகு படுத்தி வைத்து மகிழ்வுடன் கொண்டாடுவோம். தீபத்திலிருந்து வெளிப்படும் ஒளி இருளைப்போக்குவது போல் எமது உயிரோட்டத்தின் அடையாளமாக விளங்கும் ஒளிர்கின்ற தீபங்களை நாம் துதிப்பது நமது உள்ளொளியைப் பெருக்கி அக இருளைப்போக்க வல்லது என்பது நமது நம்பிக்கை. ஒளிரும் ஜோதி நிரந்தர முன்னேற்றம் தரவல்லது. ஆகவே இன்நாளில் நீராடி திருநீறு பூசி புத்தாடை அணிந்து ஆலயம் சென்று வழிபாடாற்றி பெரியோரை வணங்கி ஆசி பெற்று ஒழுக்க நெறிகளோடு வாழ அறிவுக்கண்களை திறந்து நல்லொளி பரப்பி நன்மைகளை நினைத்து நல்லதை செய்வோம். அன்போடும் பண்போடும் வாழ்வோம். தமிழர் வாழ்வில் இருள்  அகன்று ஒளி வீச தீபாவளியை கொண்டாடுவோம்.

    Monday 29 October 2012

    சைவத் தமிழ்த்திருக் கோவில்களின்; கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு – புதிய தொடக்கத்தின் ஆரம்பம்! பூமிபுத்ரன்

    By: Unknown On: 11:29
  • Let's Get Social
  • உரிமைகளுக்கான மனுக்குலத்தின் போராட்டம் ஆண்டான் - அடிமை சமூகத்தில் இருந்தே இடையறாது தொடர்ந்து வருகின்ற ஒன்று.
    உரிமைகளைத் தெரிந்து கொள்வதில், தமது நியாயாமான உரிமைகள் மறுக்கப் படுகின்றன எனப் புரிந்து கொள்வதில் ஏற்படுகின்ற தாமதம் சில வேளைகளில் உரிமைகளுக்கான கோரிக்கைகளை, அவற்றை அடைவதற்கான
    போராட்டத்தைத் தாமதப் படுத்துகின்றனவே தவிர, உரிமைகளுக்கான போராட்டம் உலகின் சகல மூலைகளிலும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் சுதந்திரத்தை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது உள்ளடக்கத்தில் சமூகத்தின் அனைத்துத் தளைகளையும் உள்ளடக்கியதாகவே அமைந்து இருப்பதைக் காணலாம். சமூக விடுதலைக்கான போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போது, அப் போராட்டத்தின் மைய சக்தியான மக்கட் கூட்டம் தம் மீது சுமத்தப்பட்டுள்ள தளைகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்கான போராட்டத்தையும் விரைவு படுத்துகின்றது.
    ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் இது விடயத்தில் விதி விலக்கானதல்ல. சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனும் பாரிய இலக்குடன் உருவான இந்தப் போராட்டம், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் புரையோடிப் போயிருந்த சாதிய ஒடுக்குமுறை, பெண் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளிலும் இருந்து தமிழ்ச் சமூகம் விடுதலை பெற்றாக வேண்டுமென்ற புரிதலையும் உருவாக்கி இருந்தது.

    இன அடிப்படையிலான விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளுள் ஒன்றான அதீத இன உணர்வு, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை நாடு கடந்தும் ஏற்படுத்தி விட்ட நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஏதோவொரு விதத்தில் தாம் ஒற்றுமைப் பட்டவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு அங்கமாகக் கடந்த காலத்தில் மனுக்குல வரலாற்றில் தமிழ் இனம் கொண்டிருந்த வரலாற்றுப் பாத்திரம் தொடர்பான புதுப்புது ஆய்வுகள், கண்டு பிடிப்புக்கள் தினம்தினம் வெளிவந்த வண்ணமேயே உள்ளன.

    தமது இனத்தின் உன்னத இருப்பு மட்டுமன்றி, அந்நியரினால் தமிழ் இனத்தின் மீது திணிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெற்றி பெற்ற இனம், தோல்வியுற்ற மக்கட் கூட்டத்தின்மீது திணிக்கும் விடயங்கள் காலப்போக்கில் 'பழகிப் போவது" மரபு. அவ்வாறு தமிழ் இனத்திலும் 'பழகிப் போன" பல விடயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்து ஆலயங்களில் சமஸ்கிருத மொழியில் நடைபெற்று வருகின்ற பூசைகள் பற்றியது.

    தமிழ்த் திராவிடர்கள் மீது ஆரியர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின் விளைவாக அறிமுகமான சமஸ்கிருதமும், வருணாச்சிரம தர்மம் முன்மொழியும் சாதியமும் இந்து மதம் தமிழர்கள் மீது திணித்த ஆரிய ஆக்கிரமிப்பின் விளைவுகளாகும். நூற்றாண்டுகள் பல கடந்தும் இந்த அடிமைத் தளைகளில் இருந்து விடுபட வழியின்றித் தமிழினம் தத்தளித்து வருகின்றது.

    ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய ஒளி காரணமாக, இந்து மத வழிபாட்டு முறைமை தொடர்பிலும் புதிய தேடல்கள் இடம்பெற்றன. அதன் விளவுகளுள் ஒன்றாக 'கடவுளுக்கு விளங்கும் மொழியான சமஸ்கிருதத்தை" விட்டுவிட்டு மனிதனுக்கு (தமிழனுக்கு) விளங்கக் கூடிய மொழியான தமிழில் பூசை செய்ய வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழத் தொடங்கின. வீர சைவ வழிபாட்டு முறைமை ஏற்கனவே தமிழ் மொழியிலான வழிபாட்டு முறையைக் கொண்டிருந்த போதிலும், ஆகம வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள இந்துக் கோவில்களில் அந்தணர்களைக் குருவாகக் கொண்ட சமஸ்கிருத வழிபாட்டு முறையே தற்போதும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது.

    பிராம்மணிய ஆதிக்கத்தின் இறுக்கமான பிடியில் சிக்குண்டுள்ள தாய்த் தமிழகத்தில் 'கருவறையில் தமிழ்மொழியில் வழிபாடு" என்ற குரல்கள் அவ்வப்போது எழுந்தாலும் அவை அடங்கிப் போய் விடுகின்றன. அல்லது அடக்கப் படுகின்றன. சாதிய அடிப்படையில் பிராமணர் அல்லாதோரின் ஆட்சி இருந்த போதிலும், ஆள்வோர் பிராம்மணிய சிந்தனையையே கொண்டிருப்பதாலும், ஆளும் வர்க்கம் பிராம்மணியமாக இருப்பதாலும் தமிழில் வழிபாடு என்ற குரல் நமத்துப் போகச் செய்யப் படுகின்றது.
    ஆனால், பிராம்மணிய ஆதிக்கம் குறைந்த ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர் மத்தியிலும் 'கருவறையில் தமிழ்மொழியில் வழிபாடு" என்ற கோரிக்கை வலுப் பெற்று தற்போது செயல் வடிவம் கண்டு நிற்கின்றது.

    ஆண்டவனைத் தமிழி;ல் வழிபாடு செய்வதுவும், பிராமணர் அல்லாத ஏனையோர் பூசை செய்வதுவும் புலம்பெயர் நாடுகளில் பழக்கத்தில் உள்ள விடயங்களே. ஆனால், அதனைப் பொதுமைப்படுத்தி, ஒரு இயக்கமாக மாற்றி, அனைத்துலகப் பிரகடனமாக, ஒரு வேண்டுகோளாக வெளியிட்டிருக்கின்றது சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலயத்தை நிர்வகிக்கும் சைவநெறிக் கூடம் நிர்வாகம். வெறுமனே பிரகடனமாக மாத்திரம் அறிவித்துவிட்டுப் போகாமல் சாத்தியமான அளவு புலம்பெயர் தேசத்துக் கோவில்களிலும், ஈழ தேசத்துக் கோவில்களிலும் அதனை நடைமுறைப் படுத்தவும் அந்த நிர்வாகம் முனைந்து நிற்கின்றது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

    மதங்கள் தேவையா, ஆலயங்கள் அவசியமா என்ற கேள்விகளுக்கு அப்பால், உள்ள நிலைமையில் இருந்து ஒருபடி மேலே செல்லுதல் என்ற அளவில் இந்தப் பிரகடனம் புரட்சிகரமானது என்பதை மறுக்க முடியாது. அது மாத்திரமன்றி, இத்தகைய செயற்பாட்டின் ஊடாக இந்து சமயத்தின் உளுத்துப் போன சித்தாந்தமான வருணாச்சிரம தர்மமும் உடைத்தெறியப் படுகின்றமையும் நோக்கத் தக்கது.
    உலகளாவிய ரீதியில் புரட்சிகளின் போது அதன் தாங்கு சக்தியாக விளங்கும் இளைஞர்களே இங்கும் இந்தப் பிரகடனத்தையும் வெளியிட்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    தாய்மொழியில் வழிபாடு எனும் கலகக் குரல்கள் மதங்களைப் பொறுத்தவரை புதிதான விடயமல்ல. அரசியல் கருவிகளாக மதங்கள் நிறுவனமயப் படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இத்தகைய குரல்கள் பல மதங்களிலும் எழுந்திருக்கின்றன. பல போரட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கணக்கற்ற குருதி சிந்தப் பட்டிருக்கிறது. 'மிகவும் நாகரீகமான மதம்" என வர்ணிக்கப் படுகின்ற கத்தோலிக்க மதத்தில் கூட ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்தகைய குரலை எழுப்பியோர் கொன்றொழிக்கப் பட்டுள்ளார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னரேயே லத்தீன் தவிர்ந்த ஏனைய மொழிகளில் கத்தோலிக்க தேவாலயங்களில் பூசை செய்வதற்கு கத்தோலிக்க உயர் பீடமான வத்திக்கான் அனுமதி வழங்கியிருந்தது. இந்த 'உரிமையைப்" பெறுவதற்கான போராட்டத்தில் பலர் உயிரை விட்டுள்ளார்கள் என்பது சரித்திரம்.

    இந்து சமயத்தைப் பொறுத்தவரை, வீர சைவ வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள ஆலயங்களிலும், கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தற்போது தமிழில் வழிபாடு நடைபெற்று வருகின்ற போதிலும், ஆகம வழிபாட்டு முறைமையைக் கொண்டுள்ள ஆலயங்களில் இன்றுவரை பிராமணர்களால் சமஸ்கிருதத்திலேயே பூசை செய்யப் பட்டு வருகின்றது.

    ஆலயங்கள் முன்னாளில் மன்னர்களாலும், பின்னாளில் அரசுகளாலும் நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலை தற்போது தளர்ந்துள்ள சூழலில் தமிழில் பூசை என்பது சாத்தியமான ஒன்றே. அதனை நடைமுறைப் படுத்துவதும் பிராமணர்களைச் சம்மதிக்க வைப்பதும் ஆலய அறங்காவலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் இதனை நடைமுறைப் படுத்துவது தாயகத்தைவிட இலகுவானது. அதற்கான அத்திவாரத்தை பேர்ண் ஞானலிங்கேச்வரர் ஆலய நிர்வாகிகள் இட்டிருக்கின்றார்கள். ஆலய அறங்காவலர்கள் மனது வைத்தால் ஈழத் தமிழர்களின் சாதனைப் பட்டியலில் 'உலகெங்கும் உள்ள சைவத் தமிழ்த்திருக் கோவில்களின்; கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு" என்பதுவும் இடம் பிடிக்கும்.

    Monday 22 October 2012

    சரஸ்வதி பூஜை என்பது என்ன?

    By: Unknown On: 09:20
  • Let's Get Social
  • சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு


    இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.


    முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.


    அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.


    நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
    ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.


    சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.

     அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

    இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.


    இதன் காரணம் என்ன?

    நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.


    என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
    அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.


    உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.


    ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.


    ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 20.10.1929 “குடிஅரசு” இதழில் வெளியானது.

    Sunday 21 October 2012

    விஜய தசமியும், மானம்பூ (வாழை வெட்டு )விழாவும்

    By: Unknown On: 03:52
  • Let's Get Social
  • அயிகிரி நந்தினி நந்தித மேதினி
    விஸ்வ வினோதினி நந்தனுதே
    கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
    விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
    பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
    பூரி குடும்பினி பூரி க்ருதே
    ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி




    ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே! இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே! கிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம். எங்களை காப்பாற்றுவாயாக.

    விஜய தசமி என்பது, அன்னை துர்க்கைதேவி மகிஷாசுரனை வென்ற வெற்றித் திருநாள். துர்கா பூஜையின் நிறைவு நாள். நவராத்திரி விழாவின் இறுதி நாளான பத்தாவது நாள் (ஒன்பதாவது நாள் என கூறுவாருமுளர்) துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுர மர்த்தினியாகத் தோன்றுகிறாள். தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜய தசமி (விஜய - வெற்றி, தசமி - 10ம் நாள்) வெற்றித் திருநாளாக எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. இவ் விழா இவ்வருடம் 24.10.2012 கொண்டாடப் பெறுகின்றது.
    ஒவ்வொருவர் எண்ணத்தில் உதிக்கும் அசுரத்தன்மையான எண்ணங்களை அழித்து ஈடேற்றும் திருநாள். ஒன்பதாம் நாள் படைத்த தொழிற் கருவிகளுக்கு மறு பூஜை செய்து அதைப் பயன்படுத்தினால் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். ஒன்பதாம் நாளன்று படைத்த புத்தகங்களுக்கும் மறு பூஜையிட்டு, அம்பாளை வேண்டிப் புத்தகங்களைப் படிக்க, சரஸ்வதியின் அருள் உடனே கிடைக்கும். இத்தினத்தில் குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களில் சேர்த்து வித்யாரம்பம் செய்தால் குழந்தைகளுக்குக் கல்வி ஞானம் பெருகும்.

    முப்பெருந்தேவிகளான உலக இயக்கத்தின் சக்தியாக, ஆதாரமாக விளங்கும் அன்னையின் அருளாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் நாளாக, வெற்றியின் ஆரம்ப நாளான, விஜயதசமி அமைகின்றது.

    பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கா தேவியை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால், தாய்மையைப் போற்றி வழிபாடு செய்யும் நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு விழாவெடுத்து, விரதமிருந்து வழிபட்டு அருள் நாடித் தொழுகின்றோம். அன்னையரின் ஆசியும் அன்பும் அரவணைப்பும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம்.

    இந்த விஜயதசமி நன்னாளானது தாய்மையின் திருவுருவிலே முப்பெருந் தேவியரின் அருள் பெற்று, ஆற்றல் பெற்று வாழ்விலே மனவலிமையும், தன்னம்பிக்கையும், சகல செல்வங்களும், வாழ்வைச் சீரான வழியில் கொண்டு நடத்த நல்லறிவும் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற உறுதியை உள்ளத்திலே தாங்கி தளர்வில்லா எதிர்காலத்தை நோக்கி எழுச்சியுடன் அடியெடுத்து வைக்கும் நன்னாளாக, அடித்தளமிடும் நாளாக விளங்குகின்றது.
    ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளைச் சீரிய, நேரிய வழியில் ஆற்றுதல் வேண்டுமென்பதை இந்நன்னாளின் தத்துவம் விளக்குகின்றது. "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது இந்துக்களின் தொன்மை மிகு தத்துவம்.
    நவராத்திரி விரத ஆரம்பத்தின் போது செழிப்பை விளக்க நவதானியங்கள் விதைக்கப்படுகின்றன. அவ்வாறு விதைக்கப்பட்ட நவதானியங்கள் இந்த நவராத்திரி நாட்களிலே செழித்து வளர்வது போன்று உலகிலே சகல வளங்களும் பெருகி உயிரினங்கள் யாவும் சிறப்பாக வளமுடன் வாழ வேண்டும் என்பதைக் குறிகாட்டும் வேண்டுதலாக இது அமைகின்றது. தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பெற்று, பயிர்ச் செய்கையின் மேன்மை புலப்படுத்தப்படுகின்றது. இயற்கையின் வளத்திற்குத் தெய்வத்தன்மை தந்து போற்றப்படுகின்றது. இவ்வாறு இயற்கை வளத்திற்குத் தெய்வத்தன்மை தந்து வழிபடுவது இந்துக்களின் பாரம்பரிய சிறப்பாக அமைகிறது.

    பத்தாவது நாள் அதாவது விஜயதசமியன்று நவராத்திரியின் தொடக்க நாளில் வைக்கப்பட்ட கும்பத்தின் புனித நீரால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. அத்துடன் விளைந்த நவதானியப் பயிர்கள் பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்த தானியப் பயிர்கள் வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அதனால் இது வளமான வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனையாக அமைகின்றது.
    நற்செயல்களைத் தொடங்க சிறப்புடைய நாளாகவும் இவ்விஜயதசமி நன்னாள் கொள்ளப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வித்தியாரம்பம் செய்தல், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பித்தல் உள்ளிட்ட சகல நற்காரியங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்நாள் உகந்ததாக அமைகின்றது. இந்நாளில் தொடங்கும் கருமங்கள் தொய்வின்றித் தொடரும், நிறைவேறும், சிறப்படையும் என்பது ஐதீகம்.

    இவ் விஜய தசமி நன்னாளுக்கு மேலும் பல சிறப்புகளுள்ளன. அவற்றிலே குறிப்பாக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்திய அன்னை சக்தியின் தோற்றம் காலத்திற்குக்காலம் நிகழும் என்ற தத்துவம், நம்பிக்கை வெளிப்படும் தினமாகவும் இந்நாள் விளங்குகின்றது.
    உலகையும், உலக உயிரினங்களையும் வாட்டி வதைக்கும் பல்வேறு துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்படும். என்ற நம்பிக்கையை நம்மனங்களிலே விதைக்கும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது. தாயாக இருந்து உலகைக் காக்கும் அன்னை பராசக்தியைச் சரணடைந்தால் அவள் எம்மை அரவணைத்து, பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையை நம்மிடம் தெளிவுறுத்தும்.

    புராணக் கதையாக மகிஷாசுரன் என்ற அசுரனை; அன்னை அழித்த கதை விளக்குகின்றது. மகிஷாசுரன் (மஹி - எருமை) என்ற எருமையின் தலையை உடைய அசுரனின் செயல்களால் உலகம் நிம்மதியிழந்து தவித்த போது அன்னை துர்க்கை தோன்றி அக்கொடிய அசுரனை அழித்து உலகில் நிம்மதியை நிலை நாட்டிய நாளாக விஜயதசமி நன்னாள் விளங்குகின்றது. இந்த விஜயதசமி தினத்திலே அதர்மத்தின் சின்னமாக விளங்கிய மகிஷாசுரனை மர்தனம் செய்து மகிஷாசுரமர்தனி என்ற பெயருக்கும் உரியவளாகின்றாள்.

    அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு மகிஷாசுரரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முகூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் முதலாக பல கோயில்களில் மானம்பூ (மா + அம்பு) என்ற நிகழ்வு நடைபெறுகின்றது. இதனை “வன்னி வாழை வெட்டுதல்” என்றும் கூறுவர். மகிஷாசுரன் துர்க்காதேவியின் அகோர கோபத்தைத் தாங்க முடியாது வன்னி மரத்தில் மறைந்து ஒழித்திருந்த போதும், அம்மன் அவனைத் தேடிச்சென்று வதம் செய்வதையும் இந்த மானம்பூ என்னும் வாழை வெட்டுதல் நினைவூட்டுகின்றது.
    வன்னிமரம் வெட்டுவதற்கு கடினமானது என்ற காரணத்தினால்; ஆலயங்களில் வெட்டுவதற்கு சுலபமான வாழை மரத்தை (கன்னி-குலை போடாத வாழைமரம்) ஆலய வாசலில் நட்டு அதில் வன்னிமரக் கிளைகளை குத்தி, அதனை வன்னி மரமாகவும் அதனுள் மகிஷாசுரன் மறைந்துள்தாகவும் ஆவாகணம் செய்து வாழை மரத்தை வெட்டுவதன் மூலம் மஹிஷாசுரன் சங்காரம் நடைபெறுவதாக ஆலயங்களில் கன்னி வாழை வெட்டும் விழா நிகழ்தப்பெறுகின்றது.

    இந் நிகழ்வு  முத்துமாரி அம்பாள் ஆலயம் உள்ளிட்ட எல்லா அம்மன் ஆலயங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும் சிறப்பான விழாவாகும். முப்பெருந்தேவிகளின் திருவருள் கிட்டவும், துன்ப, துயரங்கள் தூரவிலகவும் இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம். உமா தேவி, வன்னி மரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். அன்னையரின் அருளாசி, அரவணைப்பு வேண்டி அவர்களைச் சரணடைவோம்.

    யார் அந்த மஹிஷாசுரன்? புராணம் கூறும் கதைகள்:

    வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், பட்டமும், பலமும் கிடைத்துவிட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் தலைக்கனமும், எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் நீ எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டார். இக்காலத்தில்...

    தனு என்ற அசுரனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் அக்னி பகவான் தோன்றினார். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பா!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை.
    அவனது அசுர புத்தி வேலை செய்யத் தொடங்கியது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் (எருமைத் தலை அசுரனாக) என்னும் பெயருடன் பிறந்தான்.
    மகிஷாசுரன்; கடுந் தவம் புரிந்து பிரமதேவனிடம் பெற்ற தவ வலிமையினால் அகந்தை மேலிட தேவலோகத்தையும், பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது. மகிஷாசுரன் தனக்கு ஓர் ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். தன்னை அழிக்கும் தகுதி உள்ள ஒரு ஸ்திரி சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி அவன் கர்வமும், அகங்காரமும் கொண்டான்.

    அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக் என்ற மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.

    மகிஷாசுரனிடம் தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறஞ்சி நின்றனர்.

    தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்திகளும் மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு ஸ்திரியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஸ்ட்டித்தார்கள்.
    அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள்.

    அதற்கு "துர்கா தேவி" (சண்டிகாதேவி, காளிதேவி எனவும் கூறுவாருமுளர்) என நாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர். மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால் துர்க்காதேவி 
    "மகிஷாசுரமர்த்தினி" என்று பெயர் பெற்றாள்.

    மகிஷாசுர சங்காரம் சுலபமான ஒன்றல்ல மகிஷாசுரனின் தலை கொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மகிஷாசுரனாக உருவாகும் சக்திகொண்டது. அதனால் துர்க்காதேவி ஒருபாத்திரத்தில் அவன் இரத்தத்தை ஏந்தி அவை நிலத்தில் சிந்தாவண்ணம் தானே அதைப் பருகி மகிஷாசுரனின் சங்காரத்தை நிறைவுசெய்தாள்.

    இந் நிகழ்வைக் குறிக்கும் இன்னொரு கதையும் வழக்கத்தில் உள்ளது.
    முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் இருந்தான். ஆவன் தவவலிமை மிக்கவன் எனினும் ஆணவ மலத்தால் கட்டுண்டு அறிவுக்கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்திமிரால் அகத்தி முனிவரை மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்தான். மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர் வரமுனியை "எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக.” – என சாபமிட்டுச் சென்றார்.

    அகத்திய மாமுனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத் தலையும், மனித உடலும் பெற்றான். எனினும் அவனுடைய விடாமுயற்சியால் மீண்டும் கடுந்தவத்தைத் தொடர்ந்து பலப்பல வரங்களைப் பெற்றான். வரங்களை பெற்ற வரமுனி மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். வரமுனி தர்மத்தை மறந்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளைச் செய்யத் துவங்கினான். முனிவராக வாழ்வைத் தொடங்கிய அவன், தன் வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். அதனால் அவன் மகிசாசுரன் என அழைக்கப்படலாயினான். “மகிசம்” என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத்தலையுடைய அசுரன் என்று பொருள்.

    மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்திக் கடும் தவம் புரிந்து மகிசாசூரனின் இடையூறுகளை நீக்கி தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தை கண்டு உளம் இரங்கினாள் அன்னை பராசக்தி. மாமுனிவாகள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது, மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள்.

    மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வியை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண்குழந்தை தோன்றியது. அது "லலிதாம்பிகை" என அழைக்கப்பட்டது. அந்தப்பெண் குழந்தை 9 நாட்களில் முழுவளர்ச்சி அடைந்து 10 ஆம் நாள் அன்னை பராசக்தி மறுவடிவாக லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசூரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசூரனை அழித்த 10 ஆம் நாள் விஜய தசமி எனவும், "தசாரா" எனவும் விழா எடுத்து கொண்டாடுகினறர். தசாரா வட-இந்தியர்கள் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும்.

    காயத்ரீ - மந்திரம்ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி
    தந்நோ துர்கி: ப்ரசோதயாத்


    கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம்.


    பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டுகின்றோம் துர்க்காதேவியே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் அபிராமியே போற்றி
    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
    ஓம் அன்பின் உருவே போற்றி
    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமயவல்லியே போற்றி
    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உமையவளே போற்றி
    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி
    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் எம்பிராட்டியே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி
    ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி
    ஓம் காமாட்சியே போற்றி
    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி
    ஓம் கற்பூர நாயகியே போற்றி
    ஓம் கற்பிற்கரசியே போற்றி
    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி
    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
    ஓம் குமரனின் தாயே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே போற்றி
    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கோமதியே போற்றி
    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி
    ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சாபம் களைவாய் போற்றி
    ஓம் சிம்ம வாகனமே போற்றி
    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறு நகை புரியவளே போற்றி
    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
    ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதி ஒளியே போற்றி
    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
    ஓம் சோமியே போற்றி
    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
    ஓம் தாயே நீயே போற்றி
    ஓம் திருவருள் புரிபவளே போற்றி
    ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
    ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணியே போற்றி
    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
    ஓம் பகவதியே போற்றி

    ஓம் பவானியே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
    ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

    ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
    ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
    ஓம் மாதாங்கியே போற்றி
    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகாமாயி தாயே போற்றி
    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
    ஓம் தவன் தங்கையே போற்றி
    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் வேதவல்லியே போற்றி
    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
    ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
    ஓம் துர்க்காதேவியே போற்றி

    ஓம் சக்தி ஓம்

    துர்கை அம்பாள் துதி ஜெய ஜெய தேவி - ஜெய ஜெய தேவி - துர்காதேவி சரணம்
    துர்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்து ஓடும்
    தர்மம காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
    கர்ம வினைகளும் ஓடும்,சர்வ மங்களமும் கூடும்(ஜெய)

    பொற்கரங்கள் பதினெட்டும் சுற்றி வரும் பகை விரட்டும்
    நெற்றியிலே குங்குமப்பொட்டும் வெற்றிப்பாதையை காட்டும்
    ஆயிரம் கண்கள் உடையவளே அவள் ஆதிசக்தி பெரியவளே
    ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய)

    சங்கு சக்ரம்வில்லும் அம்பும் அங்குசம்,வாளும் வேலும் சூலமும்
    தங்க கைகளில் தாங்கி நிற்ப்பாள், திங்களை முடிமேல் சூடி நின்றாள்
    சிங்கத்தின் மேல் வீற்றிப்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள்
    மங்கையற்க்கரசியும் அவளே அங்கயற்கன்னியும் அவளே(ஜெய)


    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்


    சுந்தர வதனி சுகுண மனோகரி
    மந்தஹாஸ முக மதிவதனி
    சந்தனக் குங்கும அலங்கார முடனே
    தந்திடுவா யூந்தன் தரிசனமே (ஓம்)

    நந்திதேவருடன் முனிவரும் பணிய
    ஆனந்த முடனே வந்திடுவாய்
    வந்தனை செய்து மாயனயனுடன்
    வகையாயூன் புகழ் பாடிடவே (ஓம்)

    தங்கச் சிலம்பு சலசலவென்றிடய
    தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட
    பொங்குமானந்தமுடன் புவிமேல் விளங்கும்
    மங்களநாயகி மகிழ்வாய் வருவாய் (ஓம்)

    வேதங்கள் உன்னை வேண்டிப்பாடிட
    விரும்பி ஸரஸ்வதி வீணை வாசித்திட
    ஸதானந்தமான ஜோதிஸ்வரூபி
    ராஜ ராஜேஸ்வரி சரணம் சரணம் (ஓம்)


    மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர்.
    இத் தேவியரை நவராத்திரி காலத்தில் பக்தி சிரத்தையுடன், மனமாரத் தியானித்து நாவாரப்பாடி,
    உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும் (மனத் தையிரியத்தையும்), செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.  


    ஓம் சக்தி ஓம்

    Monday 15 October 2012

    முச்செல்வங்களையும் அள்ளிவழங்கும் நவராத்திரி!

    By: Unknown On: 20:57
  • Let's Get Social
  • அழகு அன்னை அன்பும் கருணையும் கொண்டு எம்மிடம் உறைகின்ற நாளாகிய இந்நாளில், எமக்கு அருள் தரும் தாயாக எம்மை வழிப்படுத்தி, வளப்படுத்தி, வலுப்படுத்தி எதற்கும் எம்மை தயாராகச் செய்பவளாக அருள்பாலித்து வருகிறாள்.




    அம்பிகை உலகம் காக்கும் அன்னை. பெற்றெடுத்த அன்னை எம்மைக் குடும்பத்தில் உள்ளவர்களைக் காப்பவளாக இருப்பவள். உலகம் முழுவதிலும் உள்ள உயிர்களை காப்பவளாக அன்னை ஆதிபராசக்தி வீற்றிருக்கிறாள். ஆகவே இந்நவராத்திரி நாளில் கொலுவைத்து அம்பிகையை எங்கள் வீட்டில் கொலுவிருக்க என்றும் துன்பம் இல்லாது நாம் வாழ்ந்திருக்க, அருள்தர வரவேற்கிறோம்.

    இறைவன் அருவம் உருவம் ஆகிய இருநிலைகளில் வீற்றிருக்கிறான். எமக்கு ஒரு செயல் எதுவாக இருந்தாலும் ஒரு நம்பிக்கை பிடிப்புடன் செயல்பட்டாலே ஒழிய அச்செயல் வெற்றி அளிக்காது. அது கற்பதாகட்டும் ,ஈட்டுவதாகட்டும், காரியம் ஆகுவதாகட்டும் எப்படி இருப்பினும் ஒரு சக்தி தேவை ஆகும். அச்சக்தி கொடுப்பது, அருவமாக எமில் மறைந்திருக்கும் இறை சக்தியன்றி வேறுண்டோ. ஆக அருவமாக இருப்பதை உருவத்தில் வைத்து வழிபாடாற்ற உகந்த நாள் இந் நவராத்திரி நாளாகும். சக்தி தருகின்ற சக்திக்கு ஆற்றலைக்கொடு , பொருளைக்கொடு, அறிவைக்கொடு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையின்  அருட்சக்தி கிடைக்கவேண்டுவர். அழகாக மூன்று ,ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று இப்படி படிக்கட்டுக்களை வரிசைப்படுத்தி கொலு வீடுகளிலும், ஆலயங்களிலும், கலைமன்றங்களிலும் வைக்கப்படுவது வழக்கமாகும்.

    சிலர் களிமண் உருவில் பொம்மைகள் செய்து வைத்து வழிபாடாற்றுவர். களிமண் உருவில் வழிபடுபவர்களுக்கு அது உணர்வு வடிவம் என்பது புரியவேண்டும். களிமண் கடவுள் அல்ல,அந்த உருவத்தில் இறைவியை நினைத்து வழிபட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு எமக்கு மேலான சக்தி உண்டெண்பதை உணரவைக்க இப்பூஜை வழிபாடுகள் மிக அவசியம், நமக்குள் இருந்து கொண்டு நம்மை நடத்திச் செல்பவர் யார் அத்தாயல்லவா! அழகு பொம்மைகளை அடுக்கி வைத்து அன்னையை வழிபட்டாள் அவள் மகிழ்ச்சியில் ஞானத்தையும், பக்தியையும், வைராக்கியத்தையும், நம்பிக்கையையும், இன்பதையும், போகத்தையும் அள்ளிக் கொடுத்து நாம் பலவித நன்மைகள் அடைய வழிசெய்கிறாள்.

    எப்படி பூஜை செய்ய வேண்டும். என்பதை இறைவியே எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளமை பலபுராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு தாய்க்கு தன் குழந்தைகளின் ஜீரணசக்தி பற்றி நன்கு தெரியும். அதற்கேற்பவே அவள் உணவு சமைக்கிறாள். பல குழந்தைகளுடைய தாய்க்கு அவர்களின் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு பலவிதமாக சமையல் செய்து யாருக்கு எது நல்லதோ அதற்கேற்ப சமைக்கிறாள். ஆக உலகாளும் நாயகியும் உயிர்களை வதைக்காது அவர்கள் விரும்பும் வாழ்வை அவருக்கு அள்ளிக் கொடுத்தருள் புரிகிறாள். அப்படிப்பட்ட உண்மையின் உறைவிடமாக வீற்றிருக்கும் உத்தமியை உள்ளன்போடு ஒன்பது நாளும் பூஜை ஆராதனை செய்து பாடிப் பரவி வணங்கவேண்டும்.

    வாழ்வில் மனிதர் மூன்று படி நிலைகளைக் கடக்க வேண்டும், குழந்தை, இளைஞன், வயோதிபன் இம்மூன்று நிலை அதைக்கடப்பதற்கு குழந்தையில் கல்விகற்று அறிவைக் கடந்தாகவேண்டும். இளைஞனாக உழைத்து பொருளீட்டி ஆசைகளைக்கடந்தாக வேண்டும். வயோதிகனானதும் நோயிலிருந்தும் மூப்பிலிருந்தும், குடும்பப்பொறுப்பிலிருந்தும் விலக தைரியம்பெற்று போராடி இவற்றைக்கடந்தாக வேண்டும். இதற்கு தாயாய் இருக்கும் அம்பிகையை நவ சக்திகளைத்தரும்படி வேண்டி கருணையுடன் காத்துரட்சிக்கவேண்டும் என பிரார்த்தனை செய்யவது நலம். படிப்படியாக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களைக்கடந்து இறைவியின் பாதத்தை அடைந்து மோட்சம் பெறவேண்டும். அதற்கே கொலுவைத்து படிக்கட்டில் அலங்கரிப்பர். இறைதத்துவத்தை உணரச்செய்து எதிர்காலத்தில் நமது சந்ததியினர் நம்பிக்கை கொண்டு நல்வாழ்வு வாழச் செய்யும் நவநாயகிகளை மெய்யன்போடு வணங்குவோம். கலைகள் யாவும் சித்தியடைய பிரார்த்திப்போம்.

    Thursday 11 October 2012

    நவகிரகங்கங்களைப் பற்றிச் சில ...

    By: Unknown On: 10:16
  • Let's Get Social
  • "சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
    அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே" - திருஞானசம்பந்தர்
     
    தோற்றுவாய்
    உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். துன்பமோ, துயரமோ, தொல்லையோ சிறிதும் இல்லாதவர் எவரும் இல்லை. துன்பங்கள் நம்மை ஏன் தொடர்கின்றன?
    துன்பங்கள் நமக்கு எப்படி ஏற்படுகின்றன? என்பனவற்றைத் துன்புறுபவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் துன்பத்தை தாங்க இயலாமல், அதனை போக்குவதற்கான வழி முறைகளைத் தேடி அலைகிறார்கள்.
    சோதிட நம்பிக்கை
    அவ்வாறு தேடி அலைபவர்களில் பெரும்பாலோர் சோதிட நிபுணர்களைக் கண்டு, தமக்கு எப்போது இந்தத் துயர் நீங்கும் என்னும் கேள்வியை எழுப்பிப் பெரும் பொருள் கொடுத்துச் சோதிடரின் விடைக்காக காத்திருக்கிறார்கள். பரிகாரம் என்னும் பெயரால் பகுத்தறிவிற்கு ஒவ்வாதன பலவற்றைச் செய்து, பொருளையும், காலத்தையும் வீண் விரயம் செய்கிறார்கள். ச்ப்திடர் கூறும் பரிகாரம் நமது துயரை நீக்குமா என்பதைக் குறித்துச் சிறிதேனும் சிந்திப்பதில்லை. சோதிடர்கள் எப்படி பலன் கூறுகிறார்கள்? நான் பிறந்தபோது நவகிரகங்கள் நிற்கும் இடத்தைப் பார்த்து சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளை அனுசரித்து சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அவற்றுள் சில பலிதம் ஆகும், பல பலிதம் ஆகாமல் போகும். சோதிடர்களின் வாக்குகளில் இருக்கும் நம்பிக்கை, இறைவனிடத்திலும், இறையடியார்களின் அருள்வாக்குகளிலும் நம்மில் பலருக்கு இல்லை என்பது சில சமயம் உண்மை. எனவே தான், நம்மில் பெரும்பாலோர்க்குச் சோதிடர்கள் கூறும் பரிகாரங்களை செய்து முடித்த பின்னும் துயர்கள் நீங்க பெறாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பலன் சொல்லும் சொதிடர்களில், இறைப்பட்ட்று உடையவர்கள் கூறும் பலன்களே பலிதமாகின்றன என்பது தான் உண்மை.

    நவகிரகங்கங்களைப் பற்றிச் சில
    நவகிரகங்கள் நமது வாழ்வை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை, நாம் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நமது துயரைத் துடைப்பதற்கு எந்த வழியை பின்பற்றினால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நமக்கத் தெளிவு ஏற்படும்.
    நவகிரகங்கள் இறைவனின் ஏவலர்கள், இறைவன் வகுத்துள்ள சட்டப்படி பிராரத்துவம் எனப்படும் வினை பயன் ஆகிய விதியை, நாம் அனுபவிக்கும்படி செய்வார்கள். இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களில் விதிகளில், ஏதேனும் ஒன்றை கூட்டியோ குறித்தோ மாற்றியோ பலனை கொடுக்க நவகிரகன்களால் இயலாது என்பதை நாம் தெயவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசு ஊழியர்கள் எதையும் செய்ய முடியும் அல்லவா? அதைபலவே நவகிரகங்களும் தமது விருப்பப்படி எந்த வினைப்பயனையும் யாருக்கும், நியதிக்கு மாறாகச் செய்ய முடியாது.
    சோதிட நூல்கள், நவகிரகங்கள் நமது சாதகத்தில் நிற்கும் நிலைக்கு ஏற்ப, நமக்குள்ள விதி எப்படிபட்டது என்பதை கூறமுடியுமே அன்றி, நமது உழப் போக்குவதற்கான வழிவகைகளைக் கூறுவதில்லை. நவகிரக சாந்திகள் எனக் கூறப்படுவன அனைத்தும் நமக்கு ஏற்ப்பட்ட ஊழ்வினைத் தொல்லைகளிளிரிந்து நம்மக் காக்கமாட்டா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால்,
    ஊழ்வினை துயரை நீக்குவது எப்படி?
    காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக